Published : 29 Jun 2020 04:00 PM
Last Updated : 29 Jun 2020 04:00 PM
கரோனா பொது முடக்கத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் நூதன முறையில் கற்பித்து வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் புதிய இயல்பு நிலையாக உள்ளன.
எனினும் அனைத்து மாணவர்களாலும் ஸ்மார்ட் போன்களையோ இணைய இணைப்புகளையோ பெற முடிவதில்லை. இதனால் தனது மாணவர்களுக்குப் புதிய முறையில் கற்பிக்க நினைத்தார் ஜார்க்கண்ட் மாநிலம், பங்கதி கிராமத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷ்யாம் கிஷோர் சிங்.
அந்த கிராமத்தில் மாணவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அமைந்திருக்குஅ மரங்களில், மின்கம்பங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டினார். பள்ளிக்கூட வகுப்பறையில் இருந்து ஆசிரியர்கள் மைக் மூலம் பாடம் எடுத்தனர். மாணவர்கள் எங்கிருக்கின்றனரோ அங்கிருந்தே பாடங்களைக் கற்க ஆரம்பித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதியில் இருந்து தினந்தோறும் இரண்டு மணி நேரம் இந்த முறையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார் ஆசிரியர் ஷ்யாம் கிஷோர் சிங். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ''எங்கள் பள்ளில் 246 மாணவர்கள் உள்ளனர். இதில் 42 மாணவர்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன் உள்ளது. 200-க்கும் மேற்பட்ட மாணவர் நிலை குறித்து யோசித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம்.
தினந்தோறும் காலை 10 மணிக்கு வகுப்பு தொடங்கும். மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகத்தைக் கேட்க விரும்பினால், அவர்களுடைய கோரிக்கையை யாராவது ஒருவர் செல்போனில் இருந்து எனக்கு அனுப்புவார்கள். அடுத்த நாள் அதற்கான விளக்கம் அளிக்கப்படும்'' என்றார். இதுதொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT