Published : 25 Jun 2020 06:31 PM
Last Updated : 25 Jun 2020 06:31 PM

சிஐஎஸ்சிஇ நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் ரத்து

சிஐஎஸ்சிஇ சார்பில் நடத்தப்படும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஐசிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே கரோனா வைரஸ் பரவல் நாட்டில் தொடங்கியதால், தேர்வுகள் நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 10-ம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் சிஐஎஸ்சிஇ நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஐசிஎஸ்இ தேர்வு வாரியமும் தேர்வை ரத்து செய்ய மனு தாக்கல் செய்தது.

அந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஐசிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சிபிஎஸ்இ வாரியம் என்ன விதிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதையே நாங்களும் பின்பற்றுவோம்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிபிஎஸ்இ, ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்த 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து சிஐஎஸ்சிஇ வாரியமும், 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

முன்னதாக பாம்பே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளித்த சிஐஎஸ்சிஇ வாரியம், ''தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் மாற்றியமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை நாளில் எழுதலாம். விருப்பமில்லாதவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை. அவர்களுக்கு முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீட்டு அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும்’’ என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x