Last Updated : 25 Jun, 2020 02:05 PM

 

Published : 25 Jun 2020 02:05 PM
Last Updated : 25 Jun 2020 02:05 PM

கர்நாடகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகள்: முகக்கவசம், சானிடைசர், தனிமனித இடைவெளியுடன் தொடக்கம்

முகக்கவசம், சானிடைசர், தனிமனித இடைவெளியுடன் கர்நாடகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இந்தத் தேர்வை சுமார் 8.48 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

கரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகளின் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் சில மாநிலங்களில் தேர்வை ரத்து செய்வது குறித்து குழப்ப நிலையே நீடித்து வருகிறது.

கல்லூரிகளின் தேர்வுகளை ரத்து செய்யவும் அண்மையில் யுஜிசி பரிந்துரைத்துள்ளது. இந்த சூழலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கர்நாடக மாநிலத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இத்தேர்வை 8,48,203 மாணவர்கள் எழுதுகின்றனர்.

காலையில் தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. கைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டது. உள்ளே செல்லும் முன் தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த நடைமுறைகளின்போது தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

முன்னதாக, பொதுத் தேர்வுகள் குறித்து கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறும்போது, ’’ஒரு மாணவரின் வாழ்க்கையில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு என்பது மைல்கல். ஏராளமான நபர்களிடம் கலந்து ஆலோசித்தே இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

எனினும், குழந்தைகளின் பாதுகாப்பே முக்கியம். ஒவ்வொரு தேர்வு மையங்களில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்’’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x