Published : 22 Jun 2020 02:36 PM
Last Updated : 22 Jun 2020 02:36 PM

கரோனா முடக்கம்: அன்று தனியார் பள்ளி முதல்வர்; இன்று தள்ளுவண்டியில் இட்லி விற்பவர்

தெலங்கானா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வந்த ஆசிரியர், தள்ளுவண்டியில் இட்லி, தோசை விற்கும் நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

கரோனா பொதுமுடக்கம் உலகம் முழுவதும் அனைத்து மக்களின் வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பல்வேறு நிறுவனங்கள், தொழில்கள் மீண்டும் தொடங்கப்பட்ட சூழலிலும் பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படவில்லை.

இதில் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சம்பளத் தொகை பெரும்பாலான பள்ளிகளில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தெலங்கானா மாநிலம், கம்மத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மரகணி ராம்பாபு ஊரடங்கால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மாதம் 22 ஆயிரம் சம்பாதித்த அவருக்குக் கடந்த சில மாதங்களாக வருமானத்துக்கு வழியில்லை. மனைவி, இரு குழந்தைகள், தாய் என அனைவரின் வயிற்றுப் பாட்டுக்கும் வழியில்லாத சூழல். நிறைய யோசித்தவர், ஜூன் 5-ம் தேதியன்று பொது முடக்கத் தளர்வை ஒட்டி, தள்ளுவண்டி ஒன்றை 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார்.

அதில் இட்லி, தோசை, வடை ஆகியவற்றை சமைத்து மனைவியுடன் இணைந்து விற்கத் தொடங்கினார். இதில் அவருக்கு தினந்தோறும் சுமார் ரூ.200 லாபம் கிடைப்பதாகக் கூறுகிறார் ராம்பாபு.

ஆசிரியர் ராம்பாபு இட்லி விற்பது தொடர்பான பதிவுகள் இணையத்தில் பேசுபொருளாகி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x