Published : 16 Jun 2020 07:45 AM
Last Updated : 16 Jun 2020 07:45 AM

அரசுப் பள்ளியில் ஜெபக்கூட்டம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகுத்தி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 37 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஓசூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த விஜிலா (47) என்பவர், தலைமை ஆசிரியராக உள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக, மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி பள்ளியைத் திறந்து, மாணவ, மாணவியரை வரவழைத்து, உணவுப் பொருட்களை வழங்கி விட்டு, அப்பகுதியினர் சிலர் ஜெபக்கூட்டம் நடத்தியுள்ளனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் முகக்கவசம் இல்லாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக் காமல், முழங்கால் போட்டு அமர்ந்து, ஜெப பாடல்களை படிப்பது போன்ற வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுதொடர்பாக விசாரணை நடத்த, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதபிரகாசுக்கு, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார். மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் தலைமையில், சூளகிரி வட்டார கல்வி அலுவலர்கள் சதீஷ், சுதா ஆகியோர், அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பள்ளியில் ஜெபக்கூட்டம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் விஜிலாவை, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதபிரகாஷ், நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதேபோல், ஜெபக்கூட்டம் நடந்த போது உடன் இருந்ததாக வந்த புகாரை தொடர்ந்து, ஏணுசோனை அரசு தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் செல்வி (41) என்பவருக்கு கல்வித்துறை தரப்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x