Published : 16 Jun 2020 07:15 AM
Last Updated : 16 Jun 2020 07:15 AM

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இடஒதுக்கீடு கோரிய வழக்குகள் இன்று விசாரணை

மருத்துவ படிப்புகளுக்கான அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக,திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்தியதொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும்பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்நிலையில், மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து வருவதால் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் ஆர்.சுப்பையா,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையீடு செய்தார். இதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சார்பில் தொடரப்பட்ட வழக்கையும் உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் கே.பாலு முறையீடு செய்தார். இந்த முறையீடுகளை ஏற்ற நீதிபதிகள், இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளை16-ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x