Published : 15 Jun 2020 11:44 AM
Last Updated : 15 Jun 2020 11:44 AM

பிளஸ் 1 மாணவர் சேர்க்கையைத் தொடங்கக் கூடாது; புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி முக்கியம்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையிலும், பிளஸ் 1 வகுப்பில் 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளைப் பள்ளியில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்படி, பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, புதிதாக 3 முதன்மைப் பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத் தொகுப்பைத் தேர்வு செய்யப் பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

இதற்கிடையே சில தனியார் பள்ளிகள், விதிகளை மீறி மே, ஜூன் மாதங்களில் மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டு, அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் புதிய பாடத் தொகுப்புக்கு அனுமதி கோருவது போன்ற நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் நடைபெற்றன. புதியப் பாடத் தொகுப்புக்கு அனுமதி பெறாமலும் பள்ளிகள் நடைபெற்றன.

எனவே புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் எந்த வகை மேல்நிலைப் பள்ளியும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது. மேலும், தொடர் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கும் புதிய பாடத்தொகுப்புக்கான அனுமதியைத் தர முடியாது’’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x