Last Updated : 12 Jun, 2020 01:09 PM

 

Published : 12 Jun 2020 01:09 PM
Last Updated : 12 Jun 2020 01:09 PM

வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அரசுப் பள்ளியின் முன்னெடுப்பு

புதுச்சேரியில் லாஸ்பேட்டை, கோலாக்கார ரங்கசாமி நாயக்கர் அரசுப் பள்ளி சார்பில் வாட்ஸ் அப் மூலம் குழந்தைகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.

கரோனாவால் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இக்காலத்தில் கல்வியைத் தாண்டி குழந்தைகளின் வாழ்வை வளமாக்கும் வகையில், வாழ்வியல் நிகழ்வு அவசியம். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் இல்லங்களிலேயே வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கற்று, செய்து மகிழலாம். இதற்காக, லாஸ்பேட்டை கோலக்கார ரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு வாழ்க்கைக் கல்வி என்னும் வாழ்வியல் சார்ந்த புதிய நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு செயல்பாடு பயிற்றுவிக்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் செய்தல், வாய்ப்பாட்டு, ஓவியம், கையெழுத்துப் பயிற்சி, பொது அறிவு, யோகா, திருக்குறள் ஒப்புவித்தல், உடல்நலக் கல்வி, ஸ்போக்கன் இங்கிலீஷ், இரண்டாம் வாய்ப்பாடு முதல் இருபதாம் வாய்ப்பாடு வரை படித்து, எழுதிக் காட்டுதல் போன்ற திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் வாட்ஸ் அப் மூலம் கற்பிக்கப்படுகின்றன. நிறைவில் அவற்றிற்கான பின்னூட்டம் மாணவர்களிடமிருந்து பெறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்கர ராசு கூறுகையில், "பொதுமுடக்கக் காலகட்டத்தில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளைப் பெற்று சிறந்த வழியில் செயல்படவும் இந்நிகழ்ச்சிகள் உதவுகின்றன.

வாட்ஸ் அப் இல்லாத மாணவ மாணவியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி அவர்களையும் பங்கேற்கச் செய்கின்றோம். இதில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது பின்னூட்டத்தை உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றனர். பள்ளி ஆசிரியர்கள், கலைகளைக் கற்றுத் தரும் அரசு பால்பவன் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உதவி இதில் முக்கியமானது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x