Last Updated : 12 Jun, 2020 11:21 AM

 

Published : 12 Jun 2020 11:21 AM
Last Updated : 12 Jun 2020 11:21 AM

புதுச்சேரியில் பிளஸ் 1-க்குப் போதிய இடமில்லை: சேர்க்கைக்கு அமைச்சர் கமலக்கண்ணன் உறுதி

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

பத்தாம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ள சூழலில் புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்புக்கு அனைவருக்கும் இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளஸ் 1 இடங்களை அதிகரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் வழங்கி 11-ம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க உயர்மட்டக்குழு அமைப்பதாகப் பெற்றோர் சங்கத்திடம் அமைச்சர் கமலக்கண்ணன் உறுதி அளித்துள்ளார்.

தமிழகக் கல்வித் துறையின் அறிவிப்பின்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு புதுச்சேரியிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் தமிழகக் கல்வி வாரியத்தைப் பின்பற்றியும், மாஹே கேரளக் கல்வி வாரியத்தைப் பின்பற்றியும், ஏனாம் ஆந்திரக் கல்வி வாரியத்தைப் பின்பற்றியும் செயல்படுகிறது. இதனால் புதுச்சேரி, காரைக்காலில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத இருந்த 14 ஆயிரம் பேரின் தேர்வும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலா மற்றும் பெற்றோர்கள், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனிடம் மனு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ’’தேர்ச்சி பெற்ற அனைவரையும் பிளஸ் 1-ல் சேர்த்துக்கொள்ள புதுச்சேரியில் இடமில்லை. எனவே, பிளஸ் 1 சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாகவும், மாணவர்களை 11-ம் வகுப்பில் சேர்ப்பது சம்பந்தமாகவும் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுச்சேரியிலும் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டோம். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் குழு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உறுதியளித்துள்ளார்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x