Last Updated : 11 Jun, 2020 04:39 PM

 

Published : 11 Jun 2020 04:39 PM
Last Updated : 11 Jun 2020 04:39 PM

சிறந்த பள்ளிக்கான விருதை தட்டிச் சென்ற பாகனேரி அரசுப் பள்ளி: சாதித்து காட்டிய தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

சிவகங்கை அருகே பாகனேரி உ.இரு.மு.அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. அப்பள்ளியை ஏசி வகுப்பறையுடன் கூடிய நவீனப் பள்ளியாக மாற்றிய தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிவகங்கை அருகே பாகனேரி கிராமத்தில் உ.இரு.மு. அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பாகனேரி, காடனேரி, அம்மன்பட்டி, நடராஜபுரம், கொட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங் களைச் சேர்ந்த மாணவர்கள் படிக் கின்றனர். 1965-ல் தொடங்கிய இப்பள்ளி காலப்போக்கில் கவனிப்பின்றி போனது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பிரிட்டோ, முன்னாள் மாணவர்கள், கிராம மக்களின் பங்களிப்புடன் பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றியுள்ளார். பழுதான வகுப்பறைகள் சீரமைக்கப்பட்டு, மின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆசிரியர், மாணவர்கள் செயல்பாடுகளை கண்காணிக்கவும், இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களை தடுக்கவும் பள்ளி முழுவதும் 8 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாணவர்களுக்காக ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தியுள்ளார். மின்தடை ஏற்படாமல் இருக்க இன்வெர்ட்டர் வசதியும் உள்ளது. வீடியோக்கள் மூலம் பாடம் நடத்த டிவி உள்ளது.

பட விளக்கம்: சிவகங்கை அருகே பாகனேரி உ.இரு.மு.அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை.

வகுப்பறைகளில் ஸ்பீக்கர், ஆட்டோமேட்டிக் பெல், தேவையான இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர்களும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே பாடம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது.

தற்போது 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 200 மாணவர்களும், 18 ஆசிரியர்களும் உள்ளனர். இந்நிலையில் காமராசர் பிறந்தநாள் விழா, சிறப்பு பரிசளிப்பு திட்டத்தில் அப்பள்ளிக்கு இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. மேலும் அப்பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

தனியாருக்கு நிகராக அரசு பள்ளியை மாற்றி விருது பெற்ற தலைமைஆசிரியரை கிராமமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தலைமைஆசிரியர் பிரிட்டோ கூறும்போது, " கிராமமக்களின் முழு ஒத்துழைப்பாலும், முன்னாள் மாணவர்களின் கருணையாலும் பள்ளியை மேம்படுத்தினோம்.

இதனால் விருது சாத்தியமானது. எந்தப் பள்ளியிலும் இல்லாத அளவுக்கு 15 ஏக்கரில் எங்கள் பள்ளியில் மைதானம் உள்ளது. இதனால் எமது பள்ளி மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர்.

அடிப்படை வசதிகள் மேம்படுத்தியதால், தொலைவில் உள்ள மாணவர்களும் எங்கள் பள்ளியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் இந்தாண்டு மேலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x