Published : 10 Jun 2020 02:58 PM
Last Updated : 10 Jun 2020 02:58 PM

அரசு அறிவிப்பு செய்யாமல் 11-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை: தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அரசு அறிவிப்பு செய்யாமல், 11-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு வந்தவுடன் சில தனியார் பள்ளி நிர்வாகங்கள், மதிப்பெண் கணக்கீட்டை முடித்து இன்றே பிளஸ் 1 சேர்க்கையைத் தொடங்கி விட்டன.

தனியார் பள்ளியைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர், இன்று பிளஸ் 1 பாடப் பிரிவைத் தேர்வு செய்ய பள்ளிக்கு வரும்படி அழைப்பு வந்துள்ளதாகத் தெரிவித்தார். பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை குறித்து கல்வித்துறை இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே அரசு அறிவிப்பு வரும் வரை பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்காக எந்தப் பள்ளிகளையும் திறக்கக் கூடாது என்று தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை நடத்த அறிவிப்பு எதுவும் வராத நிலையில், தனியார் பள்ளிகளில் மட்டும் சேர்க்கை நடத்துவது மிகத் தவறானது. இதனால், அரசுப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களும் தனியார் பள்ளியில் சேர மறைமுகத் தூண்டுதல் உருவாகும்.

எனவே, நோய்த் தொற்றுத் தடுப்புக் காலத்தில் அரசு அனுமதி பெறாமல் பள்ளிகளைத் திறந்து பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வரும் தனியார் பள்ளிகள் மீது பேரிடர் நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x