Last Updated : 09 Jun, 2020 02:24 PM

 

Published : 09 Jun 2020 02:24 PM
Last Updated : 09 Jun 2020 02:24 PM

புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி

தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மொத்தம் 16,709 பேர் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத இருந்தனர். கரோனா அச்சம் காரணமாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் மன அழுத்தத்தில் இருந்தனர். கரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஜூன் 15-ல் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் மாணவர்களைப் பொதுத்தேர்வுக்கு அனுப்ப பெற்றோர்கள் பலரும் தயக்கத்தில் இருந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்தது.

இச்சூழலில் மாணவர்களின் நலனைக் காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசின் நிலைப்பாடு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "தமிழகத்தின் பாடத்திட்டத்தை புதுச்சேரி கல்வித் துறை பின்பற்றுகிறது. இங்கு தனிக்கல்வி வாரியம் கிடையாது. அதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை அரசு ரத்து செய்ததால் அதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றனர்.

அதேபோல் 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து புதுச்சேரி அரசு செயல்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x