Published : 08 Jun 2020 06:01 PM
Last Updated : 08 Jun 2020 06:01 PM

ஆன்லைன் வகுப்புகளால் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்: என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது?

ஆன்லைன் வகுப்புகளால் சைபர் குற்றங்கள் அதிகரிக்கும் அபாயத்தை அடுத்து என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய அரசின் சார்பில், ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என அனைத்து விதமான கல்வி நிலையங்களும் மார்ச் 16 முதல் மூடப்பட்டுள்ளன. கரோனா தொற்று அபாயத்தால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனங்களைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டே உள்ளது.

இதனால் மாணவர்கள் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க, கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் கற்றலை அறிமுகப்படுத்தின. தீக்‌ஷா, இ பாடசாலை, என்.ஆர்.ஓ.இ.ஆர்., ஸ்வயம் மற்றும் ஸ்வயம் பிரபா ஆகிய ஆன்லைன் கல்வி முறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. தமிழக அரசு சார்பில் கல்வித் தொலைக்காட்சியில், பொதிகை தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. கல்வித் தொலைக்காட்சி யூடியூப் சேனலும் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் தனியார் பள்ளிகள் தினசரி ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி, கற்பித்து வருகின்றன. ஜூன் 1 முதல் கற்பித்தல் நிகழ்வு தொடங்கியுள்ளது. ஜூம், எட்எக்ஸ் உட்பட பல்வேறு ஆன்லைன் செயலிகளில் பள்ளி மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர்.

இதற்கிடையே மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தினசரி கையாள வேண்டிய நிலையில், சைபர் அச்சுறுத்தல்களில் சிக்காமல் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சைபர் அச்சுறுத்தல் என்பது என்ன?
* இணைய வெளியில் உலவும்போது, தனிப்பட்ட நபரின் தகவல், படங்கள், காணொலிகளில் மோசமான முறையில் கமெண்ட் செய்வது
* அடுத்தவரின் கணக்கில் அநாகரிகமான சொற்கள், படங்கள், காணொலிகளைப் பதிவேற்றுவது
* அடுத்தவர்களின் கலாச்சார, சமூக, பொருளாதாரப் பின்னணிகளைக் காயப்படுத்துவது
* பிறரின் அக்கவுண்ட், கடவுச்சொற்களைக் களவாடி, தவறாகப் பயன்படுத்துவது / பிறரின் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி அச்சுறுத்தலில் ஈடுபடுவது.

சைபர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் அபாயங்களுக்கு எதிராக மத்திய அரசின் என்சிஇஆர்டி சார்பில், ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் என்ன செய்ய வேண்டும், கூடாது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கக் கையேட்டை யுனெஸ்கோவும் இணைந்து தயாரித்துள்ளது.

அதன்படி செய்ய வேண்டியது
* வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குவது
* பிற தளங்களைப் பயன்படுத்தும்போது அந்தரங்க விவரங்களுக்கான அனுமதி குறித்து முழுமையாகப் படித்து அறிந்துகொள்வது,
தெரிந்த நபர்களுடன் மட்டுமே உரையாடுவது
* சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், காணொலிகள் போன்ற சொந்த விவரங்களைக் கவனத்துடன் பதிவிடுவது
* உங்களின் கணிப்பொறி/ டேப்லெட்டுகளை குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வது
* உங்களின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால், உடனடியாக ரிப்போர்ட் செய்வது

செய்யக் கூடாதது
* கடவுச்சொற்கள், வயது, முகவரியை பிறரிடம் வெளிப்படுத்துவது
* அடுத்தவர்கள் குறித்து அவதூறு பரப்புவது
* எந்தச் செய்தியையும் உறுதிப்படுத்தாமல் சமூக வலைதளங்களில் ஃபார்வர்ட் செய்வது
* பிறரின் உணர்வுகளைக் காயப்படுத்துவது
* லாகின் செய்து பார்த்தபிறகு லாக்-அவுட் செய்யாமலே விட்டுவிடுவது
* போலிக் கணக்குகளை உருவாக்கிப் பயன்படுத்துவது
* ஃபார்வர்ட் செய்திகளில் வரும் இணைப்பை, உறுதி செய்யாமல் திறந்து பார்ப்பது
* நண்பர்களின் விவரங்களை பொது இடங்களில் பகிராமல் இருப்பது
இவற்றைக் கட்டாயம் செய்யக்கூடாது.

ஐடி சட்டம் 2000-ன் படி, சைபர் அச்சுறுத்தல், தண்டனைக்குரிய குற்றமாகும். இதுகுறித்து மாணவர்கள் தயங்காமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாதுகாவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்க: 112 (காவல்துறை)
1098 (சைல்ட்லைன்)
ஆன்லைன் கையேட்டுக்கான இணைப்பைப் பதிவிறக்கம் செய்ய: http://www.ncert.nic.in/pdf/Safetolearn_English.pdf

கரோனா பெருந்துயரில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாத இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. குழந்தைகள் அவற்றைக் கவனத்துடன் பயன்படுத்துவதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x