Published : 03 Jun 2020 04:11 PM
Last Updated : 03 Jun 2020 04:11 PM

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்று எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் நிலவி வந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ’’10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். கரோனா வைரஸ் சூழலை முன்னிட்டு பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்.

பாடத் திட்டங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஆய்வு செய்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் உரிய முடிவுகளை எடுப்பார்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை விரைவாகத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 25-ம் தேதி முடிவடைகிறது. ஜூலை மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்பதால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x