Published : 03 Jun 2020 07:10 AM
Last Updated : 03 Jun 2020 07:10 AM

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றும் பணி தொடக்கம்

பிளஸ் 1 விடைத்தாள்களை திருத்துவதற்காக தேர்வு மண்டல முகாம்களுக்கு அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1 வகுப்புக்கு மீதமுள்ள 3 பாடங்களுக்கு ஜூன் 16-ல் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதேநேரம் தேர்வுகள் முடிந்த பாடங்களுக்கான விடைத்தாள்கள் தற்போது மாவட்ட கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதற்கிடையே ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மே 27-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து பிளஸ் 1 விடைத்தாள்கள் ஜூன் 10-ம் தேதி முதல் திருத்தப்பட உள்ளன. அதற்கு ஏதுவாக கட்டுக்காப்பு மையங்களில் இருந்து விடைத்தாள்களை, மண்டல முகாம்களுக்கு இடமாற்றும் பணிகள் நேற்று தொடங்கின.

அதன்படி மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பில் விடைத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டு மண்டல முகாம்களில் வைக்கப்பட்டு வருகின்றன. அங்குவிடைத்தாள்களை அடையாளம் காண முடியாதபடி பிரித்து வைக்கவும், பணிகளை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் துரிதமாக செய்து முடிக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x