Published : 01 Jun 2020 03:27 PM
Last Updated : 01 Jun 2020 03:27 PM

மத்திய அரசு கல்வித் தொலைக்காட்சிக்கு ஆன்லைன் கற்பித்தல் பயிற்சி: அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப் அசத்தல்

என்சிஇஆர்டி கல்வித் தொலைக்காட்சிக்கு ஆங்கிலப் பாடத்தில் ஆன்லைன் கற்பித்தல் பயிற்சிகளை அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப் நேரலையில் வழங்கியுள்ளார்.

மத்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (சிஐஇடி) மற்றும் என்சிஇஆர்டி சார்பில், கிஷோர் மஞ்ச் என்னும் கல்வித் தொலைக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் சார்பில் நடத்தப்பட்ட கற்பித்தல் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கலந்துகொண்டு மாணவர்களைச் சலிப்படைய வைக்காமல் ஆங்கிலம் கற்பிக்கும் முறைகள் மற்றும் அதில் தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துக் கற்பித்தல் என்ற உள்ளடக்கத்தோடு நேற்று (மே 31) நேரலையில் உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் திலீப் கூறும்போது, ''English teaching through Content, Methalodology, ICT Integration என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் உரையாடினேன். வாழ்வியல், ஒழுக்க நெறிமுறைகள், 21-ம் நூற்றாண்டுக்கான திறன் வளர்ப்பு ஆகியவற்றை மாணவர்களுக்குக் கற்பித்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினோம்.

மரபு விளையாட்டுகளான தாயம், பரமபதம் ஆகியவற்றின் மூலம் ஆங்கிலம் கற்பித்தல், மெய்நிகர் விளையாட்டுகள், சுவாரசியத் தேர்வு ஆகியவற்றின் மூலம் விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம் கற்பித்தல் ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கினேன்.

அத்துடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியை மேம்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மாணவர்களுக்கு வழக்கமான ஆன்லைன் தேர்வுடன் காணொலி மூலம் பங்கேற்றுத் தடையில்லாமல் பேசவும் என்ன செய்வது என்று கற்றுத் தரப்பட்டது.

அதேபோல ஆங்கில உச்சரிப்பு, மைண்ட் மேப் விளையாட்டு, ஆங்கில மொழிக்கான எளிதில் பயன்படுத்த முடிகிற இலவச செயலிகள் குறித்தும் வகுப்பெடுக்கப்பட்டது.

சுமார் 45 நிமிடங்கள் NCERT-ன் அதிகாரபூர்வ யூடியூப் பக்கம், கிஷோர் மஞ்ச் செயலி, கல்வித் தொலைக்காட்சி, ஆகிய மூன்றிலும் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பானது. இதில் இந்தியா முழுவதிலும் அனைத்து மாநில ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர்கள் தங்களின் சந்தேகங்களையும் முன்வைத்தனர். அவற்றுக்கும் விளக்கம் அளித்தேன்.

நேரக் குறைவால் மீதமுள்ள கேள்விகளை மெயிலில் அனுப்புவதாகக் கூறியுள்ளனர். அறியாத நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக பல்வேறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஜூம் செயலியில் தேசிய அளவில் ஆங்கிலம் கற்பித்தலுக்கான ஆன்லைன் கருவிகள் குறித்து ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த அனுபவம் இதற்கு உபயோகமாக இருந்தது. சிஐஇடி, என்சிஇஆர்டி இணை இயக்குநர் அமரேந்திர பெஹரா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்தார்'' என்றார் ஆசிரியர் திலீப்.

இந்த கற்பித்தல் வகுப்பைக் காண: https://www.youtube.com/watch?v=G7PffpHIOcQ&feature=youtu.be&app=desktop

கிஷோர் மஞ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=in.gov.kishoremanch

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x