Last Updated : 27 May, 2020 03:08 PM

 

Published : 27 May 2020 03:08 PM
Last Updated : 27 May 2020 03:08 PM

தென்காசியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு கூடுதலாக 139 மையங்கள் ஏற்பாடு: பெற்றோர் சந்தேகங்களைத் தீர்க்க பிரத்யேக எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு கூடுதலாக 139 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 205 மையங்களில் 17 ஆயிரத்து 446 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதியும், பிளஸ் 1 தேர்வுகள் ஜூன் 16-ம் தேதியும் தொடங்குகிறது. மேலும், கடந்த மார்ச் 24-ம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுத இயலாத தேர்வர்களுக்கு ஜூன் 18-ம் தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தேர்வு மையங்களில் தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட் 66 தேர்வு மையங்களுடன் 129 துணைத் தேர்வு மையங்கள், 10 சிறப்புத் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மொத்தம் 205 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 446 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பிளஸ் 1 தேர்வு 163 மையங்களில் நடைபெற உள்ளது. 13 ஆயிரத்து 574 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர். மேலும், கடந்த மார்ச் 24-ம் தேதி நடந்த பிளஸ் 2 தேர்வை எழுத வர இயலாத மாணவர்கள் 507 பேர் தேர்வு எழுத 63 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு 10 சிறப்புத் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதும் மையத்திலேயே தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு அனுமதிச் சீட்டு அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதி மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் இருப்பிடத்துக்குச் சென்று தேர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

தேர்வு மையங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு தேர்வு நடைபெறும் நாளிலும் தேர்வுக்கு முன்பும், பின்பும் கழிப்பறைகள், தேர்வு அறைகளில் சுத்தம் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வு அறைக்குச் செல்லும்போதும், வெளியே செல்லும்போதும் கைகளை சோப், சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முகக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்கு ஏளிதில் சென்று வரத் தேவையான போக்குவரத்து வசதி போக்குவரத்துத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு, அடையாள அட்டை மற்றும் ஆசிரியர்கள் பணி நியமன ஆணை, அடையாள அட்டையைப் பயன்படுத்தி இ- பாஸ் இல்லாமல் தேர்வு மையத்துக்கு வந்து செல்லலாம்.

மேலும், தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது சந்தேகங்களை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கேட்டுத் தெரிந்துகொள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் 9443620761, 9443621358 என்ற எண்களில் தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x