Published : 23 May 2020 01:11 PM
Last Updated : 23 May 2020 01:11 PM

ஊரடங்கு விலக்கப்படும் வரை விடைத்தாள் திருத்தும் பணியைத் தள்ளிவைக்க வேண்டும்: தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் - அலுவலர் சங்கம் வேண்டுகோள்

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 27-ம் தேதியிலிருந்து பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என தமிழகக் கல்வித் துறை அறிவித்திருக்கிறது.

ஆனால், ”பேருந்துப் போக்குவரத்துகளே முழுமையாகத் தொடங்கப்படாத நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அழைப்பது கரோனா காலத்தில் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நிலைமை சீராகும் வரை விடைத்தாள் திருத்தும் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் - அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் நீ.இளங்கோ, “கரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இப்போது உள்ள நிலையில் மே 31-ம் தேதியுடன் பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்படுமா அல்லது மேலும் தொடருமா என்று தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகப் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் அறிவிப்புகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் முழுவீச்சில் இல்லாத நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி மே 27-ல் தொடங்கும் என அரசு அறிவித்ததுள்ளது. பொது முடக்கத்தால் ஆசிரியர்கள் பலர் வெளியூர்களிலும், வெளி மாவட்டத்திலும், வெளி மாநிலங்களிலும் இருந்து வருகின்றனர்.

ஆனால், கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் மே 26- ம் தேதி பள்ளிக்கு வந்தாக வேண்டும். மே 27- ல் அனைத்து ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் ஆசிரியர்களால் எப்படி பள்ளிக்கு வரமுடியும்? அவர்களால் எப்படி விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் செல்லமுடியும்?

ஆசிரியர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேலானவர்கள் பெண்கள். கரோனா காலத்தில் அவர்கள், தங்கள் குழந்தைகளை யாருடைய பராமரிப்பிலும் விட்டு வரமுடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் சற்றும் யோசிக்காமல் கல்வித்துறை, இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ஆசிரியர்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

மேலும், கரோனோ பற்றிய அச்சம் மேலோங்கிய நிலையில், ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது. விடைத்தாள்களைப் பலரும் கையாள வேண்டிய நிலை. இதனால் தொற்று பலருக்கும் எளிதாகப் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் . ஆசிரியர்கள் இந்த அச்சத்தோடு நுட்பமான பணியான விடைத்தாள் திருத்தும் பணியை எவ்வாறு மேற்கொள்ளுவது. இது கவனச் சிதறல் இல்லாமல் செய்யவேண்டிய பணி. மாணவர்கள் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் முக்கியான பணி. விடைத்தாள் திருத்தும் செயலில் சிறிதளவு மதிப்பெண் வேறுபாடு வந்தாலும், அதிகாரிகள் முன்பு கைகட்டிப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

இவ்வளவு பொறுப்பான விடைத்தாள் திருத்தும் பணியை, பொது முடக்க காலத்தில், கரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடங்குவது சற்றும் பொருத்தமற்றது. எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளை தமிழகக் கல்வித்துறை உடனடியாகத் தள்ளி வைக்க வேண்டும். பொது முடக்கம் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகே இந்தப் பணிகளைத் தொடங்க நடவடிக்க எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் இருப்பிடத்தைக் கணக்கில் கொண்டு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே அவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகளை வழங்க வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x