Published : 22 May 2020 07:29 AM
Last Updated : 22 May 2020 07:29 AM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, 12 ஆயிரத்து 674 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சியில் சாலைகளை சுத்தம் செய்யும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள நவீன இயந்திரங்களின் செயல்பாட்டை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கரோனா முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.1 கோடியே 6 லட்சத்து 51 ஆயிரத்து 977-க்கான காசோலையை சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் வழங்கினர். அதேபோல, தேசிய சதுரங்கப் போட்டி வீரர் இனியன் மற்றும் அவரது குழுவினர் சார்பில் ரூ.90 ஆயிரத்துக்கான காசோலையையும் அமைச்சர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தேர்வினை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ,மாணவியர்களுக்கு பாதுகாப்பான முறையிலும், அச்சப்படத் தேவையில்லாத வகையிலும் நடத்தப்படும். மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக 3 ஆயிரத்து 684 தேர்வு மையங்களில் நடத்தப்படும் தேர்வு, இந்தாண்டு மூன்று மடங்கு கூடுதலாக 12 ஆயிரத்து 674 தேர்வு மையங்களில் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளுக்கு 10 கணினிகள், மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20 கணினிகள் வழங்கப்பட்டு, அதன் மூலமாக பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கரோனா பாதிப்பால் இந்த வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு இணையாக ஆன்லைன் மூலமாகவும், கல்வித் தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவது குறித்து புகார்கள் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT