Last Updated : 22 May, 2020 07:19 AM

 

Published : 22 May 2020 07:19 AM
Last Updated : 22 May 2020 07:19 AM

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புச் சூழலை ஏற்படுத்திய பிறகே பொதுத் தேர்வை நடத்த வேண்டும்: மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு முறையும் அறிவிப்பு வெளியாகி, எதிர்ப்பு எழுந்தவுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியிருப் பதாக கல்வியாளர்களும், பெற் றோர்களும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சூழலை அறிந்த ஆசிரியர்கள் சிலர் கூறு கையில், “ஒவ்வொரு முறையும் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம், அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்படும். முதல் முறையாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 10-ம்வகுப்பு மாணவர்களுக்கு முன்பு அளித்த அறிவுரைகள் இந்த விடுமுறை நாட்களில் நீர்த்துப் போயிருக்கும். எனவே, குறைந்தபட்சம் ஒருவாரமாவது மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புச் சூழலை ஏற்படுத்தி தந்து, சமூக இடைவெளியுடன் வகுப்பு நடைபெறும் அந்த ஒரு வார காலத்தில் பொதுத் தேர்வுக் கான உரிய வழிகாட்டல் மற்றும் கரோனா வைரஸ் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினால் அவர்கள் பொதுத் தேர்வை எளிதாக எதிர்கொள்வார்கள்” என்றனர்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் வனஜா, அருள்செல்வி, சந்தியா, பாரதிராஜா, அன்புவேலன் ஆகி யோரிடம் கேட்டபோது, “55 நாட் களாக வீட்டில்தான் இருக்கிறோம். பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் சிலர் தொடர்புகொண்டு ஜூன் 15-ம் தேதி தேர்வு நடைபெறும் படியுங்கள் என்றனர். தேர்வுக்கு முன்னர் ஒருமுறை வகுப்புகள் நடத்திவிட்டு, அதன்பின் தேர்வு நடத்தினால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.

மங்கலம்பேட்டை அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாஸ்கரன் கூறும் போது, “அரசு திட்டமிட்டுதான் பொதுத் தேர்வுத் தேதியை அறிவித்துள்ளது. வகுப்புகள் நடத்தும்போது 40 மாணவர்களை ஒரு வகுப்பில் அமரவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்டபோது, “சிறப்பு வகுப்புகள் நடத்துவது தொடர்பாக அரசு உத்தரவுப் பிறப்பித்தால் வகுப்பு நடத்தலாம். நாங்களாக எதையும் செய்ய இயலாது. பொது சுகாதாரத்தை பேணும் வகையில், மேஜைகள் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து போதிய சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x