Published : 18 May 2020 07:22 AM
Last Updated : 18 May 2020 07:22 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் அவசரம் ஏன்?​ - தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்​ ​

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட​10-ம் வகுப்பு பொதுத்தேர்வுஜூன் 1 முதல் 12-ம் தேதி நடைபெறஉள்ளது.​

இந்நிலையில் நோய்த்தொற்றின் தீவிரம் குறையாததால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதேநேரம், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டிவருகிறது.​​

இதற்கிடையே பெரும்பாலான பள்ளிகளில் தற்காலிக மருத்துவ முகாம்கள், காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்த பின்னரே, பள்ளிகளை தூய்மைப்படுத்தி தேர்வு மையங்களாக மாற்ற முடியும். அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுமையங்கள் அமைப்பதால் விடைத்தாள், வினாத்தாள் இடமாற்றம் உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்துமுடிக்க குறைந்த காலஅவகாசமே உள்ளது.​இவற்றை முறையாக மேற்கொள்ளாதபட்சத்தில் நோய் பரவலுக்கு வழிவகுத்துவிடும்.

மேலும், வெளிமாவட்டங்களில் இருந்துவரும் மாணவர்களில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாமா, தேர்வின் இடையே ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்பன போன்ற கேள்விகளுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லை.​​

இதேபோல், பொதுபோக்குவரத்து இல்லாததால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் சொந்த செலவில் பயணம் செய்ய வேண்டிய நிலையுள்ளது. இவை ஏழை மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகியுள்ளதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தரப்பில்குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ​​

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது,​‘‘தற்போதைய அசாதாரண சூழலில் பொதுத்தேர்வை நடத்துவது சவாலான காரியம்தான். எனினும், மாணவர்கள் நலன்கருதி தேர்வை நடத்த வேண்டிய​ அவசியம் உள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வு மையத்துக்கு எளிதாக வரமுடியும்.​​

மேலும், வெளிமாவட்டங்களில் குறைந்த அளவிலான மாணவர்களே தங்கி உள்ளனர். அவர்களைமே 25-க்குள் இருப்பிடத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விட்டால் பொதுத்தேர்வை ஆகஸ்ட் மாதத்தில்தான் நடத்த முடியும். அதனால் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் முறையான பாதுகாப்புவசதிகளுடன் தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டுகிறது. எனவே,மாணவர்கள் பயமின்றி தேர்வுக்கு தயாராகலாம். மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.​​

இதற்கிடையே பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மே 18) நடைபெறஉள்ளது. இதன்முடிவில் தேர்வுதொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x