Published : 15 May 2020 12:31 PM
Last Updated : 15 May 2020 12:31 PM

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?- அமைச்சர் அன்பழகன் விளக்கம்

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் அச்சத்தின் காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் கடந்த மார்ச் 16-ம் தேதியில் இருந்து மூடப்பட்டன. அதன் பிறகு மார்ச் 24 முதல் மே 17 வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், 11-ம் வகுப்புத் தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ஜூன் 1-ல் இருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ''தமிழகத்தில் கரோனா முடிவுக்கு வந்த பிறகே, கல்லூரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கும். ஏராளமான கல்லூரிகள் தற்போது கரோனா முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. கல்லூரிகளில் கரோனா தொற்று குறித்த ஆய்வுகளும் சில இடங்களில் கரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகின்றன.

கல்லூரிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்த பிறகே அவை திறக்கப்படும். எனினும் கல்லூரிகளைத் திறக்கும் சூழல் ஏற்பட்டால், அதற்கும் உயர் கல்வித்துறை தயாராகவே இருக்கிறது. அதே நேரத்தில், கல்வி நிலையங்களில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் பாதுகாப்புப் பணிகளும் நடைபெற்ற பிறகே கல்லூரிகள் திறப்பு இருக்கும்'' என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x