Published : 14 May 2020 03:58 PM
Last Updated : 14 May 2020 03:58 PM

நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துக: பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை

கரோனா காரணமாக நாடு முழுவதும் இப்போது நிலவும் அசாதாரணமான சூழலில் உடனடியாக 10-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது. இதற்கென தனியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்கள் தரும் அறிக்கையின்படி தேர்வை நடத்த வேண்டும். அதுவரை தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் எனத் தனியார் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியர் - அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் நீ. இளங்கோ பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய இளங்கோ, “கரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து பள்ளிகள் திடீரென மூடப்பட்டுவிட்டன. தொடர்ந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பெருவாரியான மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. இப்படிப்பட்ட நிலையில் பள்ளித் தேர்வை நடத்தினால் மாணவர்கள் எத்தகைய மனநிலையில் வந்து தேர்வுகளை எழுதுவார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை உணர்ந்துதான் பல்கலைக்கழக மானியக் குழுவானது மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் குடும்பச் சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்வேறு சலுகைகளோடு தேர்வுகளை நடத்திட வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

அதில், அகமதிப்பீட்டு முறையை 50 விழுக்காடு மதிப்பெண்ளுக்குக் கணக்கில் கொள்ளலாம். மீதம் உள்ள 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு முந்தைய பருவத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளன. மேலும், கல்லூரிகளுக்கான தேர்வுகளை நடத்திட ஜூலை மாதத்தையே பல்கலைக்கழக மானியக் குழுவும் பரிந்துரை செய்துள்ளது.

அப்படியிருக்கும் போது, கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் இந்த நேரத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்தப்போவதாக அறிவித்திருப்பது பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களிலும் பொதுத் தேர்வுகள் பற்றிய திட்டமிடுதலே இன்னும் ஆரம்பிக்கவில்லை.

கரோனா தாக்குதலால் அச்சமும் பீதியும் கலந்த நிச்சயமற்ற நிலையில் மக்கள் இருப்பதால் பொதுத் தேர்வுகளைப் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். இது பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மனரீதியிலான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதியைத் திரும்பப் பெற வேண்டும்.

பருவத் தேர்வுகள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு ஒரு நிபுணர் குழு அமைத்து அதன் அடிப்படையில் முடிவெடுத்ததைப் போல தமிழக பள்ளிக் கல்வித் துறையும் நிபுணர் குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கைப்படி 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தொற்று பரவ ஆரம்பித்ததுமே பள்ளிகள் மூடப்பட்டதால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் தேர்வுக்கான பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, இப்போது தேர்வை நடத்தினால், முதன்முறையாக பொதுத் தேர்வு எழுத வரும் கிராமப்புறத்து மாணவர்கள் எந்த அளவுக்குத் தேர்ச்சி பெறுவார்கள் என்பதையும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. இதுபோன்ற காரணங்களையும், கரோனாவால் மாணவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களையும் கவனத்தில் கொண்டு தமிழகக் கல்வித்துறை இந்த விஷயத்தில் தகுந்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x