Last Updated : 14 May, 2020 02:33 PM

 

Published : 14 May 2020 02:33 PM
Last Updated : 14 May 2020 02:33 PM

கல்விக் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை

கல்விக் கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

''தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் காரணமாக பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், அவர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை இம்மாதமே செலுத்த வேண்டும் என்று சில தனியார் பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அப்படிக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கரோனா வைரஸ் பீதி காரணமாக கடந்த 50 நாட்களாக மக்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர். குறிப்பாக, நடுத்தரக் குடும்பத்தினர் வெளியில் சொல்லமுடியாத நெருக்கடியில் உள்ளனர். ஏழைகள் பாடு மிகவும் மோசமாக உள்ளது. தற்போது அன்றாட உணவு உள்ளிட்ட தேவைகளுக்கே அரசின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்திருக்கும் அவர்களிடம் கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறார். தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் இதுகுறித்து அரசாணை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், அதன் பிறகும் தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் கட்டாயக் கட்டண வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது. மூன்றாவது கட்டப் பொதுமுடக்கம் முடிந்து இம்மாதம், நான்காம்கட்டப் பொதுமுடக்கம் தொடங்க உள்ளது. அதன் பிறகும் எப்போது இயல்பு நிலை திரும்பும்... எப்போது மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்? என்பது தெரியவில்லை.

பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் இம்மாதம் கல்விக் கட்டணம் செலுத்தாத குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கப்படமாட்டார்கள்; அவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி நிர்வாகங்கள் எச்சரிப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை பள்ளி நிர்வாகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கரோனா அச்சம் தொடர்பாக நெருக்கடிகள் சரியாகும் வரை கல்விக் கட்டணம் வசூலிப்பதைக் கருணை அடிப்படையில் அவர்கள் நிறுத்தி வைக்க வேண்டும். அதையும் மீறி அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x