Published : 14 May 2020 11:27 AM
Last Updated : 14 May 2020 11:27 AM

பெற்றோர்கள், மாணவர்களை அடுத்து ஆசிரியர்களுடனும் நேரலையில் கலந்துரையாடல்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

பெற்றோர்கள், மாணவர்களை அடுத்து ஆசிரியர்களுடனும் நேரலையில் கலந்துரையாட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தின. அதில் சிக்கல்கள், பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்தது. வீட்டிலேயே இருப்பதால் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஆசிரியர்களுடன் இன்று நேரலையில் பேச உள்ளார்.

முன்னதாக, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஏப். 27 அன்று இணையம் வழியாகக் கலந்துரையாடினார். ஆன்லைன் வகுப்புகள், உளவியல் பிரச்சினைகள் உள்ளிட்ட மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இதில் பேசப்பட்டன.

இதைத் தொடர்ந்து மாணவர்களிடையேயும் அமைச்சர் பொக்ரியால் ட்விட்டர் நேரலையில் கலந்துரையாடினார். மே 5-ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது. பொதுத் தேர்வுகள் குறித்தும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே 14) ஆசிரியர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேரலையில் பேச உள்ளார். அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகுடன் ஆசிரியர்கள் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை முன்வைக்கலாம். இந்த நேரலை இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x