Published : 12 May 2020 04:24 PM
Last Updated : 12 May 2020 04:24 PM

கரோனா முடிவுக்கு வந்த பிறகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தவேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

மின்னல் வேகத்தில் கரோனா பரவிவரும் நிலையில், 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாக உள்ளது. ஆரம்பக் கட்டத்தில் தமிழகத்தில் 9 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இன்று நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவி 8,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தினம் 500 பேருக்குக் குறையாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் கரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 1-ம் தேதிக்குள் கரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றால் மகிழ்ச்சி. ஏனெனில் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது கேள்விக்குறியே. வெவ்வேறு பள்ளிகளில் படித்து வரும் 500 முதல் 1000 மாணவர்கள் ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுதுவார்கள். அறைக்கு 20 மாணவர்கள் என்றாலும் தேர்வு மையத்திற்கு வரும்போதும் தேர்வு முடித்துத் திரும்பும்போதும் சமூக இடைவெளியை எதிர்பார்ப்பது இயலாத காரியம்.

மேலும், 2 மாதங்களாக விடுப்பிலிருந்து நேரடியாக 10-ம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு எழுதச்சொல்வது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு இது மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எனவே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வினை ரத்து செய்ய இயலாத பட்சத்தில் கரோனா முடிவுக்கு வந்த பிறகே தேர்வு நடத்தவேண்டும். அதுவும் மாணவர்களுக்கு நினைவூட்டல், ஆயத்தப் பயிற்சிக்கு என பள்ளி திறந்து 2 வாரங்களுக்குப் பிறகு தேர்வு வைத்தால் மட்டுமே மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.

அதேபோல 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி அளவில் தேர்ச்சியளித்திட வேண்டும். மேலும் +2 விடைத்தாள் திருத்தும் மையங்களை அதிகரித்து ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்புக் கவசங்கள் வழங்க வேண்டும்'' என்று இளமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x