Published : 07 May 2020 03:05 PM
Last Updated : 07 May 2020 03:05 PM
மிசோரம் தனியார் பள்ளிகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தை முன்னிட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இல்லாததால் பெரும்பாலான மக்கள் தங்களின் அத்தியாவசிய செலவுகளைக் கூடக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஓரிரு மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, குழந்தைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 50% கட்டணம் மட்டுமே பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கல்வித் துறை, மாணவர் அமைப்புகள், மிசோரம் சுதந்திரப் பள்ளிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளன.
இந்த சந்திப்புக்கு மாநில கல்வித்துறை அமைச்சர் லால்சந்தமா ரால்டே தலைமை வகித்தார். அனைத்து தனியார் பள்ளி உரிமையாளர்களும் கரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களின் சூழலைக் கருத்தில்கொண்டு அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதில் தனியார் மற்றும் மிஷனரி பள்ளிகள், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT