Published : 29 Apr 2020 08:19 AM
Last Updated : 29 Apr 2020 08:19 AM

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதிய கல்வி ஆண்டு தாமதம் தொடர்பாக ​​மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை​

வரும் கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொண்டார்.​

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளின் வகுப்புகள், தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் உட்பட அனைத்து கல்விப்பணிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.​

இதையடுத்து கல்வி ஆண்டு தாமதம் தொடர்பாக உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைகள் வழங்கியுள்ளது. அதில், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை கல்லூரிகள் செப்டம்பரில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது.​

இதற்கான ஆலோசனைக் கூட்டம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்கள், செயலர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர். இதில் தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.​

ஊரடங்கு முடிந்தபின் புதிய கல்வி ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் யுஜிசியின் பரிந்துரைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் பல மாநிலங்கள் யுஜிசியின் பரிந்துரைகளை ஏற்க முன்வந்துள்ளன. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.​

அதேபோல், பள்ளிக்கல்வியில் இணையவழி கற்றல், கற்பித்தல் வழிமுறைகளை ஊக்குவித்தல், ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கல்வி பற்றிய பயிற்சி தருதல், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விதிமீறலைத் தடுத்து நடவடிக்கை எடுப்பது, தொடர் விடுமுறைக்குப்பின் பள்ளிகளை எப்போது திறப்பது, பொதுத்தேர்வுகளின் நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x