Published : 25 Apr 2020 03:05 PM
Last Updated : 25 Apr 2020 03:05 PM

ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 உதவித்தொகை: நேசக்கரம் நீட்டிய தமிழ்த் துறைப் பேராசிரியர்கள்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிற்கும் மக்களுக்கு அந்தந்தப் பகுதி சார்ந்தோர் நேசக்கரம் நீட்டிவரும் நிலையில், நாகர்கோவில் இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் தங்களிடம் கல்வி பயிலும் எளிய குடும்பத்தின் மாணவ- மாணவிகளுக்கு செய்த உதவி நெகிழ வைத்துள்ளது.

நாகர்கோவில் இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் ஊரடங்கு காலத்தில் தங்களிடம் பயிலும் மாணவ - மாணவிகளின் குடும்பச் சூழலைப் பற்றி யோசித்தனர். அதன் விளைவாக, தங்களிடம் கல்வி பயிலும் ஏழ்மை நிலையில் இருக்கும் 26 பேரை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பெற்றோரின் வங்கிக் கணக்கில் தலா 3000 ரூபாய் வீதம் கரோனா கால நிவாரணமாகச் செலுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஜெகதீசன் இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், “தொழில்கல்வி பயில்வோரைவிட பொருளாதார ரீதியில் அடுத்த இடத்தில் இருப்போரே கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிகம் படிக்கின்றனர். அதிலும் தாய்மொழியான தமிழைப் பொறுத்தவரை ஆர்வத்தின் பேரில் எடுப்பவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், பிளஸ் டூ வரை தமிழ் வழியிலேயே கல்வி கற்றோர், அரசுப்பள்ளிகளில் படித்து வந்தோர் ஆகியோர் தேர்வு செய்யும் விருப்பப் பாடமாகவும் தமிழ் இருக்கிறது. அதனால்தான் இந்த ஊரடங்கில் அவர்களைப் பற்றி யோசித்தோம்.

கல்லூரியில் சீருடை சிஸ்டம் இருக்கிறது. இதனால் கல்லூரிக்கு அணிந்துவரும் ஆடைகளின் அடிப்படையில் பொருளாதார நிலை குறித்த தீர்மானத்துக்கு வர இயலாது. அதனால்தான் கொஞ்சம் மாற்றி யோசித்தோம். தமிழ்த் துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்புக்கும் பிரத்யேகமாக வாட்ஸ் - அப் குழு இருக்கிறது. இப்போது ஆடியோ வடிவில் அதில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த குழுக்களில் அவர்களிடமே வறிய நிலையில் இருக்கும் நண்பர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கேட்டோம். இந்த 26 பேரையும் அவர்களுடன் பயிலும் சக மாணவ - மாணவிகளே தேர்ந்தெடுத்தார்கள்.

எங்கள் துறையில் மொத்தம் 15 பேராசிரியர்கள் இருக்கிறோம். நலிவுற்ற நிலையில் இருக்கும் நம் மாணவ - மாணவிகளுக்கு உதவ நினைக்கும் விருப்பத்தைச் சொன்னதும், சக பேராசிரியர்கள் அனைவருமே இதற்கு தங்கள் நிதி பங்களிப்பையும் வழங்கினார்கள். இதோ இப்போது மாணவ- மாணவிகளின் பெற்றோரின் வங்கிக்கணக்கில் இந்தப் பணத்தை செலுத்தியிருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x