Published : 21 Apr 2020 08:16 PM
Last Updated : 21 Apr 2020 08:16 PM

உதவித் தொகையை உடனடியாக வழங்குங்கள்: யுஜிசியிடம் மாணவர்கள் வேண்டுகோள்

உதவித் தொகையை உடனடியாக வழங்குங்கள் என்று யுஜிசியிடம் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25-ல் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதற்கு முன்பிருந்தே மார்ச் 15 வாக்கில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் ஜேஆர்எஃப், சிஎஸ்ஐஆர், எஸ்சி, எஸ்டி, ஓபிசி உதவித் தொகை ஆகியவற்றோடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சார்பில் வழங்கப்படும் மெரிட் உதவித் தொகைகளும் கிடைக்கப் பெறாத சூழல் உள்ளது.

இந்நிலையில் யுஜிசி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஜேஎன்யு மாணவர் தலைவர் ஐஷி கோஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மாணவர்களுக்கு எதுவும் இல்லை. உதவித் தொகையோ நிதி உதவியோ எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

மாணவர்களின் கணக்குகளில் யுஜிசி உடனடியாக பணத்தைச் செலுத்த வேண்டும். லாக்டவுன் காலத்தில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல மற்ற கல்லூரிகளிலும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ''பிப்ரவரி மாதம் வரை உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. மார்ச் மாதத்துக்காக ஃபெல்லோஷிப் இதுவரை வழங்கப்படவில்லை. யுஜிசி இதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x