Published : 21 Apr 2020 04:44 PM
Last Updated : 21 Apr 2020 04:44 PM
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானிகள் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு இஸ்ரோ அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.
இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடப்பு ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி இஸ்ரோவின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 5-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 1.52 லட்சம் பள்ளி மாணவர்கள் வரை விண்ணப்பித்தனர். அவர்களில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் தலா 10 பேர் வீதம் தற்காலிகமாக 368 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிக்கட்ட மாணவர் தேர்வுப் பட்டியலை இஸ்ரோ வெளியிட இருந்தது.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலை அடுத்து மே 11 முதல் 22 வரை நடைபெற இருந்த இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT