Published : 21 Apr 2020 03:16 PM
Last Updated : 21 Apr 2020 03:16 PM

தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம்: தமிழக அரசு புதிய உத்தரவு

தனியார் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தக் கோரிக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25-ல் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதற்கு முன்பிருந்தே மார்ச் 15 வாக்கில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தக் கோருவதாகப் பல்வேறு தரப்பிடம் இருந்து புகார்கள் எழுந்தன. 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான தொகையையும் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையையும் உடனடியாகச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தக் கோரிக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், ''ஊரடங்கு நேரத்தில் சில தனியார் கல்லூரிகள்/ பள்ளிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு சீரிய முறையில் பரிசீலித்தது. அதன்படி, மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான தொகையையோ 2019-20 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையையோ செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.

அதேபோல தாமதமாகக் கட்டினால் அபராதம் விதிக்கக் கூடாது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி, ஊரடங்கு நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x