Published : 18 Apr 2020 01:35 PM
Last Updated : 18 Apr 2020 01:35 PM

அலுவலகப் பணிக்காக தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி: அரசிடம் வேண்டுகோள்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பராமரிப்பு, அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் தனியார் பள்ளிகளை மே 4-ம் தேதி திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆா்.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் அனைத்தும் கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 22-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.

மே 3-ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், உடனடியாக பள்ளிகளைத் திறந்து கல்வி சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்வது சாத்தியமில்லை.

அதேவேளையில், ஏற்கெனவே அரசு அறிவித்தபடி பிளஸ் 1 வகுப்புகளில் எஞ்சியுள்ள தேர்வுகள், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு, விடைத்தாள்கள் திருத்தும் பணி என பல்வேறு முக்கியப் பணிகளை பள்ளி வளாகங்களில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் பள்ளி வளாகங்கள், வகுப்புகளில் கிருமிநாசினி தெளித்தல், வண்ணம் பூசுதல், மாணவர்களுக்கான இருக்கைகளைத் தயார்படுத்துதல் என பல்வேறு பராமரிப்புப் பணிகளையும், அலுவல் சார்ந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளை மே 4-ம் தேதி திறக்கவும் அலுவலகப் பணிகளை மட்டும் மேற்கொள்ள குறைந்தபட்சம் இருவரை மட்டுமாவது அனுமதிக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x