கரோனா: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கிய கணித ஆசிரியர்

கரோனா: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கிய கணித ஆசிரியர்

Published on

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாநகராட்சிப் பள்ளி கணித ஆசிரியர் ரூ.25 ஆயிரம் நிவராண நிதி வழங்கினார்.

கரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளன. அதனையொட்டி இந்தியாவிலும் தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு மே 3-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் உள்ள கணித ஆசிரியர் எம்.துரைப்பாண்டி இன்று மாவட்ட ஆட்சியரிடம் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

மதுரை செனாய் நகரில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் எம்.துரைப்பாண்டி. இவர் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யை சந்தித்து கோவிட்-19 (கரோனா வைரஸ்) தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரது சம்பளத்திலிருந்து ரூ. 25 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்.

இதுகுறித்து ஆசிரியர் எம்.துரைப்பாண்டி கூறுகையில், ''என்னைப் போன்று மற்ற ஆசிரியர்களும் நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும்'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in