Published : 11 Apr 2020 01:51 PM
Last Updated : 11 Apr 2020 01:51 PM

இணையவழிக் கற்றலை எப்படி மேம்படுத்தலாம்?- ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

இணையவழிக் கற்றலை எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரிடமும் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பாரத் பதே ஆன்லைன் (Bharat Padhe Online) என்ற பெயரில் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் ஆன்லைன் கல்வி முறைகளை மேம்படுத்தத் திட்டங்கள்/ ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன.

இதுகுறித்துப் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''இந்தியாவின் தலைசிறந்த மூளைகளைக் கொண்டு கல்வி முறையை மேம்படுத்த ஆலோசனைகள் கேட்கப்படும். #BharatPadheOnline என்ற ஹேஷ்டேகுடன் இ-மெயில் அல்லது ட்விட்டர் வாயிலாக மக்கள், தங்களின் கருத்துகளை அனுப்பலாம். ஏப்ரல் 16-ம் தேதி வரை ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

ட்விட்டரில் திட்டங்களைப் பகிரும்போது மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஐடி மற்றும் அமைச்சரின் அதிகாரபூர்வ ஐடியையும் டேக் செய்ய வேண்டியது அவசியம். bharatpadheonline.mhrd@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு மாணவர்களின் தங்களின் ஆலோசனைகளை அனுப்பலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் முழு மனதுடன் இதில் பங்கேற்க வேண்டும்.

ஏற்கெனவே உள்ள ஆன்லைன் கல்வி முறைகளில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டலாம். கல்வியாளர்களும் கல்வித் துறையில் ஆர்வம் கொண்டவர்களும் ஆன்லைன் கல்வித் தளத்தை இன்னும் சிறப்பாக்க முன்வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x