Published : 10 Apr 2020 10:34 AM
Last Updated : 10 Apr 2020 10:34 AM

குட்டிக் கதை 28: கரோனா- வெளியே வராதீங்க ப்ளீஸ்!

“இப்போ ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி நம்ம நாலு பேரும் டிஸ்கஸ் பண்ணணும், அதனால நீ கொஞ்சம் லைன்லயே இரு, இதோ கான்பரன்ஸ் கால் போடறேன்” என்று தருணிடம் சொன்னாள் தன்ஷிகா.

சிறிது நேரத்தில் தர்சன், மேகா இருவரும் லைனில் வந்தனர்.

“முக்கியமான விஷயம்ன்னு சொன்னயே, இப்போ சொல்லு” என்றான் தருண்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா”

“ஏன், என்ன ஆச்சி?”

“ஒரே அபார்ட்மென்ட்ல பக்கத்து பக்கத்து போர்ஷனில் வசிக்கறோம். ஆனா நம்மளையே பக்கத்து போர்ஷனுக்குக் கூட போகக் கூடாதுன்னு சொல்றாங்க, ஏன்னா வெளியே போய்ட்டு உள்ள வந்தா, கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்குங்கறாங்க. கரோனா வைரஸ் இருக்கறது உடனடியா வெளியே தெரியாதாம். கரோனாவால பாதிக்கப்பட்டவங்க இருமினாலோ, அல்லது தும்மினாலோ அது மூலமா அந்த வைரஸ் பரவலாமாம், கரோனா தொற்று இருக்கறவங்க தொட்ட இடங்களில் நாம கையை வெச்சா அதன் மூலமாக்கூட தொற்று ஏற்படலாம்ன்னு சொல்றாங்க, அப்படி இருக்கும் போது என் அம்மா, உன் அப்பா, தர்ஷனோட அக்கா, மேகாவோட அண்ணா இவங்களுக்கெல்லாம் என்ன ஆகும்ன்னு நெனச்சாலே ரொம்ப பயமா இருக்குப்பா”

“ஆமா, டிவில நியூஸ் பாக்கும் போதெல்லாம் எனக்கு கூட பயமா தான் இருக்கு”

“ஆமா, யாரும் வீட்டை விட்டு வெளிய வராம இருந்தா இதை சீக்கரம் கட்டுப்படுத்த முடியும்ன்னு சொல்றாங்க, ஆனா நிறைய பேர் வெளிய வராங்கன்னு டிவில சொல்லும் போது எனக்கும் கவலையா இருக்கு”

“ஆனா, தேவை இல்லாம வெளியே வர்றவங்கள நாம எப்படி தடுக்க முடியும்?”

“உடனே நம்ம மிஷனை ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்” என்றாள் தன்ஷிகா.

பிறகு கொஞ்ச நேரம் நால்வரும் ஏதோ பேசிக் கொண்டார்கள். அப்பறம் ஒவ்வொருத்தரும் ஒரு பேக்கில எதையோ எடுத்து வெச்சாங்க. அப்பறம் வீட்டில இருக்கற மத்தவங்களுக்கு தெரியாம வெளியே கிளம்புனாங்க.

இக்கட்டான இந்த சூழ்நிலையில அவங்க எங்க போறாங்கன்னு பாக்கறதுக்கு முன்னாடி ஏன் இந்த நான்கு பேரும் அவங்க உறவுகளுக்காகக் கவலைப்படறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

தன்ஷிகாவோட அம்மா ஒரு மருத்துவர். தருணோட அப்பா காவல்துறையில் பணிபுரியும் ஒரு சப் இன்ஸ்பெக்டர். தர்ஷனோட அக்கா செவிலியர். மேகாவோட அண்ணா சுகாதாரத்துறை ஊழியர். இவங்க எல்லாம் இரவு பகல் பாராம கரோனாவைத் தடுக்க முயற்சி செஞ்சிகிட்டு இருக்காங்க. யாரும் வீட்டை விட்டு வெளிய போக கூடாதுன்னு தடை இருக்கற இந்த நேரத்தில இவங்க மட்டும் வீட்டுக்கு வெளியேதான் இருக்காங்க. அவங்க வீட்டுக்குள்ளே வர்றதே அபூர்வமா இருக்கு. அப்படியே வீட்டுக்கு வந்தாலும் வீட்டுல இருக்கறவங்களுக்கு பாதிப்பு வரக் கூடாதுன்னு ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படுது.

ம்.. ஒரு நிமிஷம் இருங்க,. “யாருக்கும் தெரியாம கவனமா வாங்க” அப்படீன்னு அங்க ஒரு சத்தம் கேக்குது. ஆமாம்… அந்த நாலு பசங்கதான்

வெளிய கிளம்பி அப்படியே ரோட்டுக்கு வராங்க. அப்படியே கொஞ்சம் தூரம் நடந்து நாலு தெரு ஒண்ணா கூடற ஒரு ஜங்ஷனுக்கு வந்தாங்க. “பசங்களா, நீங்க எப்படி வெளிய வந்தீங்க, உங்க வீட்ல இருக்கறவங்க உங்களை எப்படி வெளிய விட்டாங்க, 144 தடை உத்தரவு போட்டு இருக்காங்க, அதனால முக்கியமான வேலை இருந்தா, பெரியவங்க மட்டும்தான் வெளிய வரலாம். நீங்க உடனே வீட்டுக்கு போங்க” என்று அங்கிருந்த ஒரு காவலர் சொன்னார்.

“அங்கிள், நாங்களும் ரொம்ப முக்கியமான ஒரு வேலையா தான் வெளிய வந்திருக்கோம்” என்று சொல்லி அவரது காதில் ரகசியமாய் ஏதோ சொன்னார்கள். அதன் பிறகு அந்த காவலர் அவர்களை எதுவும் சொல்லாமல் சற்று தூரமாய்ப் போனார்.

அப்போது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நால்வரும் மடக்கினர்.

“அங்கிள், 144 தடை போட்டிருக்கற இந்த நேரத்தில நீங்க ஏன் வெளிய வந்தீங்க” என்று கேட்டனர்.

‘என்ன கொடும டா இது, நாம கேக்க வேண்டிய கேள்வியை இவங்க நம்மள மடக்கி கேக்கறாங்க’ அப்படின்னு நெனச்ச அவர், “அது சரி, நீங்க மட்டும் வெளிய வரலாமா?” என்றார்.

“கரோனா பரவக் கூடாதுன்னு டாக்டரான எங்க அம்மா, காவல்துறையில இருக்கற இவங்க அப்பா, நர்ஸா இருக்கற அவனோட அக்கா, சுகாதாரத் துறை ஊழியரான அவனோட அண்ணா இதுமாதிரி நிறைய பேர் உயிரைப் பணயம் வெச்சு வேலை செய்யறாங்க, நீங்கல்லாம் வெளிய வராம இருந்தா இந்த நோயை சீக்கரம் கட்டுப்படுத்திட்டு அவங்கல்லாம் வீட்டுக்கு வந்து எங்க கூட சந்தோஷமா இருப்பாங்க.

நீங்க எல்லாம் ஏதோ ஒண்ணு வேணும்ன்னு நெனச்சு வெளிய வர்றீங்க, ஆனா எங்க அம்மா எனக்கு வேணும்ன்னு சொல்லறதுக்காக இப்போ நான் வெளிய வந்திருக்கேன், ப்ளீஸ் அங்கிள், உங்க உறவுக்காரங்க எல்லாம் பாதுகாப்பா இருக்காங்களான்னு அவங்களை கேக்கறீங்களே, நாங்கல்லாம் உங்க உறவு இல்லையா?, எங்க அம்மா, அப்பா, அக்கா, அண்ணா எல்லாம் நல்லா இருக்கணும் நினைக்க மாட்டீங்களா? ஏன் அங்கிள் வெளிய வர்ரீங்க” என்று கண்ணீர் மல்கக் கேட்டாள் தன்ஷிகா.

“மாத்திரை வாங்க வந்தீங்களா, இந்தாங்க அங்கிள், இதுல கொஞ்சம் மாத்திரை இருக்கு, ஏதாவது வேணுமா பாருங்க” என்றான் தருண்

“காய் வாங்க வந்தீங்களா இந்தாங்க அங்கிள், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு எல்லாம் இருக்கு, எது வேணுமோ எடுத்துக்கோங்க” என்றான் தர்ஷன்.

“பேங்க்ல பணம் எடுக்க வந்தீங்களா, நாங்க நாலு பேரும் சேர்த்து வச்ச 1200 ரூபாய் இருக்கு, இந்தாங்க அங்கிள் எவ்ளோ வேணுமோ எடுத்து கிட்டு வீட்டுக்கு போங்க அங்கிள், நீங்கல்லாம் வீட்லயே இருந்தா மட்டும்தான் எங்க அம்மா, அப்பா, அக்கா,அண்ணாலாம் சீக்கரம் வீட்டுக்கு வர முடியும், ஃபிளீஸ் புரிஞ்சிகோங்க அங்கிள்” என்றாள் மேகா.

குழந்தைகளின் உணர்ச்சிகரமான இந்த செயலைப் பார்த்த அவரது கண்களில் கண்ணீர் தளும்பியது. அதனை வெளிக்காட்டாமல் “சரி, குட்டீஸ், நான் நல்லா புரிஞ்சிகிட்டேன், இனி வெளிய வரவே மாட்டேன், நான் புரிஞ்சிகிட்டதை மத்தவங்களுக்கும் சொல்லி புரிய வைக்கறேன், கககபோ” என்று கூறிச் சிரித்தார்.

“ க க க போ ன்னா என்ன அர்த்தம் அங்கிள்?”

“ க – கவனமாய் இருப்போம்

க – கரோனாவை ஒழிப்போம்

க - கலங்காதே போ”

ஆம்! உண்மை தான். தனது உறவுகளையும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கரோனாவை எதிர்த்து போராடும் இந்த நம் உறவுகளுக்காகவாவது வீட்டிலேயே இருப்போம். கரோனாவை வேரோடு களைவோம்.

- கலாவல்லி அருள்,
தலைமையாசிரியர், அரசினர் உயர் நிலைப் பள்ளி, திருக்காலிமேடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x