Published : 08 Apr 2020 12:29 PM
Last Updated : 08 Apr 2020 12:29 PM

தெற்காசிய நாடுகளில் குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்றுவது அவசரத் தேவை: யுனிசெஃப்

தெற்காசிய நாடுகளில் குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்ற வேண்டியது நம்முடைய அவசரத் தேவையாக உள்ளது என்று யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மார்ச் 31-ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மே 15 வரை விடுமுறை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கரோனா பிரச்சினைக்கு முன்னதாக 9.5 கோடி மக்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில், 43 கோடி குழந்தைகள் இடைநிற்றல் அபாயத்தில் இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது,

இது தொடர்பாக யுனிசெஃப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''அபாயகரமான சூழலில் இருக்கும் குழந்தைகளும் எளிதில் அணுக முடியாத தூரத்தில் இருப்பவர்களும் மீண்டும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புகள் குறைவே. குறிப்பாக பள்ளிகள் மூடியிருக்கும்போது கற்றலுக்கான மாற்று வழிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்போது, இந்த அபாயம் அதிகரிக்கிறது.

இணைய வசதி இல்லாத குழந்தைகளுக்கு வானொலி, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது அச்சடிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் வாயிலாகவோ கற்பித்தலை நிகழ்த்தலாம்.

தெற்காசிய நாடுகளின் சில பகுதிகளில் வானொலி, தொலைக்காட்சி கூட இருப்பதில்லை, குறிப்பாக நேபாள கிராமப் புறங்களில் 35 சதவீதம் தொலைக்காட்சி இல்லாத பகுதிகள்தான். ஆப்கன் மற்றும் நேபாளத்தில், வீடுகளுக்கே நேரடியாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதை மற்ற நாடுகளின் ஊரகப் பகுதிகளும் பின்பற்ற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x