Last Updated : 06 Apr, 2020 05:18 PM

 

Published : 06 Apr 2020 05:18 PM
Last Updated : 06 Apr 2020 05:18 PM

ஊரடங்கால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வாழ்க்கைக் கல்வி: தூத்துக்குடி பள்ளியின் புதிய முயற்சி

கரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள தூத்துக்குடியில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகம் இணையம் மூலமாக புதிய முயற்சி எடுத்துள்ளது.

இந்த சார்பில் இணையம் மூலமாக 'ஜும் வகுப்பறை' (zoom classroom) என்ற புதிய தொழில்நுட்பத்தை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி 2 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தபடியே இந்த வகுப்புகளை நடத்தியும், கற்றும் வருகின்றனர்.

இந்த ஜும் வகுப்பறையில் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுக்கின்றனர். யோகா, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்ளுதல், வாய்ப்பாடுகளை சுலபமாக கற்றுக்கொள்ளும் வழிமுறைகள், நீதிநெறிக் கதை சொல்லுதல், கூட்டெழுத்து எழுதும் முறைகள், வீட்டில் உள்ள தேவை இல்லாத பொருட்கள் மூலம் புதிய கலைபொருட்களை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகள், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு போன்ற அசாதாரண சூழலையை மாணவர்கள் இதற்கு முன்னர் சந்தித்து இருக்க மாட்டார்கள் என்ற காரணத்தால், அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சியையும் மாணவர்களுக்கு கொடுத்து வருவதாக பள்ளியின் தலைமை ஆசிரியை ஜுவானா கோல்டி தெரிவித்தார்.

இந்த புதிய முயற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை இந்த பயிற்சியில் கலந்துகொள்ள வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x