Published : 06 Apr 2020 05:08 PM
Last Updated : 06 Apr 2020 05:08 PM

கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் உதவி எண்கள்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

ஊரடங்கு காரணமாக தனிமையில் இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு உதவ அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில், தேசிய ஊரடங்கு காலத்தில் மாணவ சமூகத்தின் மனநலன் மற்றும் உளவியல் - சமூகப் பிரச்சினைகளை அடையாளம் காண வேண்டியது அவசியம். கோவிட்-19 பிரச்சினையிலும் அதற்குப் பிறகும் இதைக் கவனமாகக் கையாள வேண்டும்.

மாணவர்களின் அழுத்தம் மற்றும் பயத்தைப் போக்கி, படிப்பு மற்றும் உடல்நலனைப் பேணிக் காக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும். இதற்கு உளவியல் நலனுக்கான உதவி எண்களை அறிவிக்க வேண்டும்.

விடுதித் தலைவர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்கள் தலைமையில் மாணவர்களுக்கு உதவ குழு அமைக்கப்பட வேண்டும். இதற்காக அடையாளம் காணப்பட்ட பேராசிரியர்கள், உளவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இவை தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்காக 08046110007 என்ற உதவி எண்ணை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''ஏப்ரல் 14-ம் தேதியன்று நிலைமையை மீண்டும் ஆய்வு செய்வோம். சூழலைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கலாமா அல்லது சிறிது காலம் விடுமுறை அளிக்கலாமா என்று முடிவு செய்யப்படும்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x