Published : 06 Apr 2020 11:21 AM
Last Updated : 06 Apr 2020 11:21 AM

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?- அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில்

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.

உலக நாடுகளை பாதிப்பில் ஆழ்த்தி வரும் கரோனா வைரஸால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 2-ம் வாரத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14 வரை இந்த ஊரடங்கு இருக்கும். இதற்கிடையே ஏப்ரல் 15-ல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''இந்தத் தருணத்தில் முடிவெடுப்பது மிகவும் கடினமான ஒன்று. ஏப்ரல் 14-ம் தேதியன்று நிலைமையை மீண்டும் ஆய்வு செய்வோம். சூழலைப் பொருத்து பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கலாமா அல்லது சிறிது காலம் விடுமுறை அளிக்கலாமா என்று முடிவு செய்யப்படும்.

நாடு முழுவதும் 34 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். அவர்களே நமது ஆகச்சிறந்த சொத்து.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே இப்போது முக்கியம். மீண்டும் விடுமுறை விடப்பட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் இருப்பதை அமைச்சகம் உறுதி செய்யும்.

ஊரடங்கு சூழலில் பள்ளி, கல்லூரிகள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நிலைமை சாதகமான பிறகு மீதமுள்ள தேர்வுகளை நடத்தவும் வினாத்தாள்களைத் திருத்தவும் ஏற்கெனவே ஒரு திட்டம் தயாராக உள்ளது.

தற்போது ஸ்வயம் உள்ளிட்ட இணையதளம் வழியாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x