Last Updated : 03 Apr, 2020 01:37 PM

 

Published : 03 Apr 2020 01:37 PM
Last Updated : 03 Apr 2020 01:37 PM

கரோனா தடுப்புப் பணிக்கு தன்னார்வலர்களாக வரத் தயார்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

கரோனா வைரஸ் பேரழிவிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களாகப் பணியாற்றத் தயார் என்று தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''கரோனா வைரஸ் உலக அளவில் பல்லாயிரம் மனித உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இந்திய மக்களைப் பாதுகாக்க பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் பழனிசாமியும் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் பெரும் அழிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கவும், ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களைக் காக்கவும் கிட்டத்தட்ட ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு நிதியும் ஒதுக்கியிருக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி, அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குத் தேவையான அளவு கிடைக்கவும் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனை தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மனதாரப் பாராட்டுகிறது.

இந்த நேரத்தில் அரசுக்குத் தோள்கொடுக்கும் விதமாக கரோனா தடுப்புப் பணியில் தன்னார்வலர்களாகப் பணியாற்றவும், பொதுமக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளவும் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் விரும்புகிறோம். எங்களின் சேவையைப் பள்ளிக் கல்வித்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விருப்பமுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணியை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையிலும் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பட்டியலைத் தயார் செய்யும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. அந்தப் பட்டியலில் எங்களையும் இணைத்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

அத்துடன், பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த 8 ஆண்டுகளாக மே மாத ஊதியம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த சோதனையான கரோனா பேராபத்துக் காலத்தில் மே மாதம் ஊதியத்தையும் கருணையுடன் வழங்க முதல்வர் உத்தரவிடவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x