Last Updated : 02 Apr, 2020 02:21 PM

 

Published : 02 Apr 2020 02:21 PM
Last Updated : 02 Apr 2020 02:21 PM

உயர்கல்வி பயில்வோருக்கு ஆன்லைனில் பாடம் நடத்தும் கல்லூரிப் பேராசிரியர்கள்

புதுச்சேரி

உயர்கல்வி பயில்வோருக்கு ஆன்லைன் மூலமாக புதுச்சேரியில் கல்லூரிப் பேராசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்படவில்லை. வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் உயர்கல்வி கற்றுத் தரும் பேராசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய புதுச்சேரி உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இச்சூழலில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காகப் பாடங்களை ஆன்லைன் மூலம் புதுச்சேரி பேராசிரியர்கள் நடத்துகின்றனர்.

இது தொடர்பாக புதுச்சேரி அரசுப் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் கேட்டதற்கு, "புதுச்சேரி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் தொடங்கி உயர்கல்வி கற்றுத் தரும் பேராசிரியர்கள் பலரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தினமும் வகுப்பு எடுத்து வருகின்றனர். கூகுள் கிளாஸ் ரூம், இமெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என பல்வேறு வழிமுறைகளில் பாடம் போதிக்கப்படுகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் போன், லேப்டாப், கணினி மூலம் இவ்வகுப்பில் பங்கேற்கின்றனர்" என்று குறிப்பிட்டனர்.

மாணவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "இது நீண்ட விடுமுறை. அதே நேரத்தில் உயர்கல்வி கற்க வேண்டியது அவசியம். பல பேராசிரியர்கள் ஆர்வமுடன் வகுப்பு எடுக்கின்றனர். பயனுள்ள வகையில் செயல்படுகிறோம். பாடம் நடத்துவதுடன் ஆன்லைன் தேர்வுகள், செயல்முறை பயிற்சி ஆகியவையும் தரப்படுகிறது. ஊடரங்கு நிறைவடையும் வரை இப்பயிற்சி தொடரும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x