Published : 02 Apr 2020 11:30 AM
Last Updated : 02 Apr 2020 11:30 AM

1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி: சிபிஎஸ்இ அறிவிப்பு

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன / தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு மாநிலங்களின் கல்வி வாரியங்கள் தேர்வு இல்லாமலேயே 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ என்ன முடிவெடுக்கும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கோவிட் 19 சூழலைக் கருதி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்குத் தரம் உயர்த்துமாறு சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு அறிவுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''1 முதல் 8-ம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்குத் தேர்ச்சி அளிக்கப்படுவர். என்சிஆர்டி உடன் கலந்தாலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x