Published : 29 Mar 2020 07:41 AM
Last Updated : 29 Mar 2020 07:41 AM

கல்விக்கட்டணம் வசூலிக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

கோபி தொகுதியில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாதுகாப்பு உபகரணங்களை நேற்று வழங்கினார்.

ஈரோடு

தனியார் பள்ளிகள் இந்த ஆண்டுக்|கான கல்விக் கட்டணத்தை தற்போது வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தனியார் பள்ளிகள் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தற்போது வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் குடிநீர் வரி வீட்டுவரி மற்றும் நிலுவை வரிகளை வசூலிப்பதை ஒத்திவைப்பது குறித்து உள்ளாட்சி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்த பின்னர், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து அறிவிக்கப்படும்.

நீட் பயிற்சி இல்லை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் யுடியூப் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாக பேராசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு எவ்வளவு நாட்கள் வரை உள்ளதோ அது வரை நீட்தேர்வுக்கு பயிற்சி அளிக்க முடியாது. நிலைமை சரியானதும் 9 கல்லூரிகளில் 3,500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயார் நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x