Published : 25 Mar 2020 01:24 PM
Last Updated : 25 Mar 2020 01:24 PM

8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: கே.வி. பள்ளிகளுக்கு உத்தரவு

தேர்வு இல்லாமலே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யுமாறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேந்திரிய வித்யாலய சங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2019-20 ஆம் கல்வியாண்டில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படும். தேர்வு எழுதிய அல்லது பல்வேறு காரணங்களால் தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களும் தரம் உயர்த்தப்படுவர். 1 முதல் 8-ம் வகுப்பு வரை இந்தக் கட்டாயத் தேர்ச்சி மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயத் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக உ.பி.யில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு, தேர்வுகள் இல்லாமலேயே 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்குச் செல்லலாம் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x