Published : 23 Mar 2020 10:11 AM
Last Updated : 23 Mar 2020 10:11 AM

மாணவர்கள் முகக் கவசத்துடன் வந்தால் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்: தேர்வுத்துறை

சளி, இருமல் பாதிப்புள்ள மாணவர்கள் முகக் கவசத்துடன் வந்தால் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

உலகையே புரட்டிப் போடும் கரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இங்கு 390 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மார்ச் 2-ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் (மார்ச் 24) முடிவடைகின்றன. அதேபோல, பிளஸ் 1 தேர்வுகள் 26-ம் தேதியுடன் முடிவடைகின்றன. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே தேர்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், ''தேர்வு எழுத வரும் மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு முன்னதாக கைகளை சோப்பு மூலம் நன்றாக சுத்தம் செய்த பிறகு, கைகளில் சானிட்டைசர் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர் தங்களுடன் ஹேண்ட் சானிட்டைசரை எடுத்து செல்ல அனுமதிக்கலாம், சளி, இருமல் பாதிப்பு இருப்பவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் அவர்களைத் தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும்'' என்று தேர்வுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x