Published : 17 Mar 2020 06:54 AM
Last Updated : 17 Mar 2020 06:54 AM

பிளஸ் 2 இயற்பியலில் 1 மதிப்பெண் வினாக்கள் கடினம்: சென்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையும்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்றுகடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, சென்டம் எடுப்போரின் எண்ணிக்கை குறையக் கூடும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.

இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, "ஒருமதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. அனைத்துப் பாடத்தையும் நன்கு படித்திருந்தால் மட்டுமே ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்து வினாக்களுக்கும் சரியாக விடையளிக்க முடியும். பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தாலும் அவை மறைமுகமாக இருந்தன. நன்கு புரிந்து படித்தமாணவர்களால்தான் விடையளிக்க முடியும். பெரிய வினாக்கள்பகுதியில் நேரடியான வினாக்களும், மறைமுகமான வினாக்களும் கலந்து இடம்பெற்றிருந்தன" என்று தெரிவித்தனர்.

ஒரு மதிப்பெண் பகுதியில் வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருப்பதால் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம். ஏற்கெனவே நடந்துமுடிந்த கணிதத் தேர்வும் கடினமாக இருந்ததாகவே பெரும்பாலான மாணவ, மாணவிகள் தெரிவித்திருந்தனர்.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியமூன்று பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கணிதமும், இயற்பியலும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருதுவதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட்ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x