Published : 16 Mar 2020 05:46 PM
Last Updated : 16 Mar 2020 05:46 PM

தமிழகத்தில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறையா?- முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 வைரஸ் நோய் அண்டை மாநிலங்களில் இருந்து பரவாமல் தடுக்க தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி), தொடக்கப் பள்ளிகளுக்கும் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி இதனை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசிடம் இருந்து விடுமுறை உத்தரவு வராததால், அங்கன்வாடி மையங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. எனினும் பெரும்பாலான குழந்தைகள் அங்கன்வாடிக்கு வரவில்லை.

5-ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அங்கன்வாடிகள் விடுமுறை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வராததால் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்துப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ''ஆய்வுக் கூட்டத்தில் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும். பின்னர் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தற்போது தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x