Published : 16 Mar 2020 05:27 PM
Last Updated : 16 Mar 2020 05:27 PM

கரோனா: ஆன்லைனில் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், ஐஐடி சென்னை மற்றும் குவி ஜீக் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவிலிருந்து பரவிய கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 148 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கோவிட் -19 காய்ச்சலுக்கு 1,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் மட்டும் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,150 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை கோவிட் 19 காய்ச்சலால் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏராளமான கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வளாகத் தேர்வுக்காகத் தயாராகும் மாணவர்களுக்கு ஐஐடி சென்னை மற்றும் குவி ஜீக் நிறுவனம் சார்பில், இலவசப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஐஐடி சென்னை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''ஐஐடி மாணவர்கள் இதற்காக www.guvi.io என்ற இணையதளத்தை அணுகி, விவரங்களைப் பெறலாம். இரண்டு வாரங்களுக்கு ஆன்லைன் மூலமாக இந்தப் பயிற்சி வழங்கப்படும். மாணவர்கள் தேவைப்பட்டால் தங்களின் தாய்மொழியிலேயே பயிற்சி பெறலாம்.

அதேபோல தலைசிறந்த நிறுவனங்களைச் சேர்ந்த 100 தொழில்நுட்ப வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்க உள்ளனர். 30 நாட்களுக்கு இலவசமாக இந்தப் பயிற்சி வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x