Published : 16 Mar 2020 02:29 PM
Last Updated : 16 Mar 2020 02:29 PM

கரோனா அச்சம்; அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை இல்லையா?- பெற்றோர் குழப்பம்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது குறித்து பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் நோய் அண்டை மாநிலங்களில் இருந்து பரவாமல் தடுக்க தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி), தொடக்கப் பள்ளிகளுக்கும் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி இதனை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசிடம் இருந்து விடுமுறை உத்தரவு வராததால், அங்கன்வாடி மையங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. எனினும் பெரும்பாலான குழந்தைகள் அங்கன்வாடிக்கு வரவில்லை.

இதுகுறித்து சாலிகிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் கூறுகையில், ''5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அங்கன்வாடிகள் விடுமுறை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் எங்கள் மகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதா வேண்டாமா என்று குழப்பம் நிலவுகிறது. அங்கன்வாடி மையங்களுக்கான விடுமுறை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x